• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..,

ByKalamegam Viswanathan

Oct 11, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியில் வசிப்பவர் துளசி இவரது மனைவி தேவி என்ற தவமணி இவருக்கு சுபஸ்ரீ உள்பட நான்கு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுபஸ்ரீ அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் இவரது தந்தை விபத்தில் கை கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் வீட்டில் இருப்பதால் இவரது மனைவி தவமணி தேவி சோழவந்தான் ஆலங்கொட்டாரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் தற்காலிக பணியாளராக பணி செய்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறைத்தினமான இன்று சுபஸ்ரீ வீட்டின் மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க சென்றபோது வைத்தியநாதபுரத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மின் கம்பத்திற்கு கொண்டு சென்ற உயர் அழுத்த மின் கம்பத்தில் காய போட்டிருந்த துணி எடுக்கச் சென்றபோது அதன் மூலம் சுபஸ்ரீ மீது மின்சாரம் தாக்கியதால் மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிய வருகிறது கை கால்கள் ஊனமாகி வீட்டோடு இருக்கும் சுப சிரியின் தந்தை துளசி மற்றும் தற்காலிக பணியாளராக சொற்ப வருமானத்தில் வேலை செய்யும் அவரது மனைவி தேவி என்ற தவமணி மற்றும் சுபஸ்ரீ யின் உடன் பிறந்த சகோதரிகள் மூன்று பேர் என குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதால் அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதி வழங்க வேண்டும் மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மூன்று பெண் குழந்தைகளின் கல்வி செலவுகளையும் அரசு ஏற்க முன்வர வேண்டும் என அவரது பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அருகில் இருந்த பொதுமக்கள் கூறுகையில் குடியிருப்பு பகுதியில் அதிக மின்னழுத்தம் உள்ள மின் கம்பிகள் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் நடப்பதாகவும் மின்சார துறையினர் போர்க்கால அடிப்படையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நேரத்தில் உடனடியாக இதுபோன்ற மின் கம்பிகளை மாற்றி பொது மக்களின் உயிரை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.