புதுச்சேரி பாகூர் அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர், சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள தன்னுடைய நிலத்தில் களை பறிக்கச் சென்றுள்ளார்.
அங்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சுமார் 28 வயதுள்ள இளைஞர் ஒருவர் இந்த முதாட்டியிடம், தன்னுடைய உறவினருக்கு பேச வேண்டும் என்று செல்போன் கேட்டுள்ளார்.
அதற்கு மூதாட்டி செல்போனை கொடுத்துள்ளார். அப்போது போனில் பேசுவது போல் நடித்து அருகில் கிடந்த ஒரு உருட்டு கட்டையை எடுத்து அந்த மூதாட்டியின் பின்புற கழுத்தில் ஓங்கி அடித்துள்ளார். அதில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து, அந்த மூதாட்டியை ஒரு மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், உறவினர்கள் அந்த மூதாட்டிக்கு மதிய உணவு எடுத்து வந்துள்ளனர். அப்போது, நிலத்தில் அவரைக் காணாததால் சத்தம் போட்டு கூப்பிட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த புதரில் இருந்து இளைஞர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, மூதாட்டி மயங்கிய நிலையில் அலங்கோலமாக கிடந்துள்ளார். நிலைமையை உணர்ந்த உறவினர்கள், தப்பியோடிய அந்த இளைஞரை துரத்திச் சென்றுள்ளனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதையடுத்து அந்த மூதாட்டியை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் ராஜீவ்காந்தி பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவலின் பேரில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஒரு வாரமாக குற்றவாளி குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் குற்றவாளியை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர், பாதிக்கப்பட்ட மூதாட்டி மற்றும் சம்பவம் அருகே இளைஞர் தப்பியோடியதை பார்த்த சிலர் கொடுத்த அங்க அடையாளங்களை வைத்து குற்றவாளியின் வரைபடத்தை வரைந்து வெளியிட்டுள்ளனர். அந்த வரைபடத்தைக் கொண்டு புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் போலீசார் உதவியுடன் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.