• Sat. May 17th, 2025

பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி

Byவிஷா

May 1, 2025

பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,500 கட்டணத்தில் 6 நாட்கள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை விடுமுறையை கொளுத்தும் வெயிலில் அலைந்து திரிந்து மாணவர்கள் வீணாக்காமல் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இந்த சிறப்பு கணினி பயிலரங்கம், அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசார் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தில் இயங்கிவரும் டாக்டர் கலாம் கணினி மையத்தில் ப நடைபெறவுள்ளது.
மே 12 முதல் 17 வரை தொடர்ந்து 6 நாள்கள் இந்த சிறப்பு பயிலரங்கம் நடைபெறும்.
இந்தப் பயிலரங்கில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் கலந்துகொள்ளலாம். மொத்தம் 50 பேர் அனுமதிக்கப்படுவர்.
இதற்கான பதிவுக் கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும்.
முதலில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்தப் பயிலரங்கில் அடிப்படை கணினி முறை, சாப்ட்வேர், சி புரோகிராமிங் குறித்த அடிப்படை விஷயங்கள், டேட்டா முறைகள், கணிதம் மற்றும் தர்க்கவியல் செயல்பாடுகள், டேட்டா ஒழுங்குபடுத்துதல், ஆவண மேலாண்மை, நினைவக ஒதுக்கீடு போன்றவை குறித்து கற்றுத் தரப்படும்.
இதில் சேர விரும்பும் மாணவர்கள் மே 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், 044-22516012, 22516317 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம் என எம்ஐடி டாக்டர் கலாம் கணினி மையத்தின் தலைவர் பேராசிரியர் பி.தனசேகர் தெரிவித்துள்ளார்.