மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குன்னுத்துப்பட்டியில் 7 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட நடுகல் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது.,
மூன்று பக்கம் சிற்பங்கள் நிறைந்த இந்த நடுகல்லின் முன் பகுதியில் இரண்டு அடிக்கு ஒரு அடுக்கு என 4 அடுக்குகளிலும், பக்கவாட்டில் உள்ள இரு புறமும் 5 அடுக்குகளிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
முன் பகுதியில் உள்ள சிற்பத்தில் ஒரு இனக்குழு தலைவனோ, குறுநில மன்னனோ குதிரையில் வருவது போன்றும், புலியுடன் போராடி புலியை கொல்வது போன்றும், இறந்தவரை இரு தேவதைகள் சொர்க்கத்திற்கு அழைத்து செல்வது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது., இதில் சிறப்பு வாய்ந்தாகவும் தனித்துவமான சிற்பமாக புலியை வீரன் கொல்லும் காட்சியில் புலியை தனது வாளால் வீரன் கொல்வது போன்றும் அதே வீரனை புலி தலைப்பகுதியில் தாக்கி வீரனை கொல்வது போன்றும் தத்துரூபமாக செதுக்கப்பட்டுள்ளது., இது அரிதான காட்சி அமைப்பு கொண்ட சிற்பமாக காணப்படுகிறது.
மேலும், இரு புறமும் உள்ள அடுக்குகளில் வீரனுடன் வந்த படை வீரர்களின் சிற்பங்களும் செதுப்பட்டுள்ளது, இந்த சிற்பங்களின் அடிப்படையில் இந்த புலிக்குத்தி நடுகல் சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமையான நடுகல்லாக இருக்கக்கூடும் என தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.