வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
எனவே இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
நாளை (நவம்பர் 23) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 24) தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிகிறது.
இந்தநிலையில், 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 25 ம் தேதி முதல் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரே மாதத்தில் 3 வது முறையாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக வருகிற 24, 25 மற்றும் 26 ம் தேதிகளில் கனமழைக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.