3,000 லிட்டர் மதுவை கைப்பற்றி அதனை ஆற்றில் கொட்டி தாலிபான்கள் அழித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். தாலிபான் அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டு உள்ளது.
தாலிபான் ஆட்சி அமைத்ததில் இருந்து ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மது ஒழிப்பையும் தாலிபான்கள் தீவிரமாக அமல்படுத்தி உள்ளனர். இஸ்லாமியர்கள் மதுபானம் தயாரிப்பது, பயன்படுத்துவது போன்றவை ஏற்புடையதல்ல என கருதும் தாலிபான்கள், மது பயன்பாட்டை ஒழிக்க தீவிரமான தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தலைநகர் காபூலில் மதுபானங்களை தயாரித்து கடத்திய மூவரை கைது செய்த தாலிபான்கள் அவர்களிடம் இருந்து 3,000 லிட்டர் மதுவை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து அங்குள்ள வாய்க்கால் ஒன்றில் பேரல்களில் உள்ள மதுவை தாலிபான்கள் ஊற்றி அழித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.