• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்பு

காடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் மோசடி செய்த நபரின் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

ஏற்கனவே போலி வங்கி ஆரம்பித்து 30 லட்சம் பொதுமக்களை ஏமாற்றிய நிலையில் இரண்டாவதாக தமிழக அளவில் 30 கோடி ரூபாய் ஏமாற்றிய நபர் மீது சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி சேபெருமால் வீதி என்ற இடத்தில் குப்புசாமி என்பவருடைய மகன் நாகராஜ் தனது குடும்ப உறுப்பினர்களான அம்மா மணி, அக்கா கோகிலா, மனைவி சத்யா ஆகியோர் பெயரில் கேஎம்கேஎஸ் குளோபல் டிரேடர்ஸ் என்ற நிதி நிறுவனம் தொடங்கியுள்ளார். இதன் மூலம் சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களிடம் அதிக வட்டி கொடுப்பதாகவும், இரண்டு வருடம் கழித்து முதலீடு தொகை முழுவதும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து பேராசை மிகுதியில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சேலம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் ஒரு கோடி வரை அவரிடம் முதலீடு செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் கடந்த பல மாதங்களாக அனைவருக்கும் முறையாக வட்டி வழங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ந்தேதியன்று தான் வருமான வரி கட்டுவதாக பெங்களூர் செல்வதாகவும், முதலீடு செய்த அனைவருக்கும் பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று சேர வேண்டிய 8 சதவீத வட்டி தவணை தொகை வங்கி கணக்கில் வந்தடையும் என்று வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்து சென்றதாக கூறப்படுகிறது. பின்பு நேற்று வரை யாருடைய கணக்கில் வட்டி பணம் வரவு வராததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துவிட்டு இன்று அவரது வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் நாகராஜ் மீது புகார் கொடுத்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நிதி நிறுவன உரிமையாளரை தேடி வருவது குறிப்பிடத்தக்கதாகும். முற்றுகையிட்டவர்கள் பலபேர் தங்கள் முகம் வெளியில் தெரிய வேண்டாம் என அவசரஅவசரமாக அங்கிருந்து வெளியேறியதால், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்து இருக்கலாம் எனவும், இது மாதிரியான பெண்களை குறிவைத்து மோசடி நபர் ஏமாற்றி இருக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.