


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள 60க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 200- ஆண், பெண் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் அறையில் மூலப் பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நடந்தது. விபத்தில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானதுடன், 10-க்கு மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன. அப்போது கட்டிட இடுப்பாடுகளுக்குள் சிக்கி சொக்கலிங்கபுரம் கலைச்செல்வி( வயது 35) மாரியம்மாள்( வயது 38) கூமாபட்டி திருவாய்மொழி( வயது 40) ஆகிய 3- பெண்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

எம். புதுப்பட்டி பாக்கியலட்சுமி, ரெங்கபாளையம் லட்சுமி, கோபாலன் பட்டி ராமசுப்பு, கூமாபட்டி கோமதி ஆகிய நால்வரும் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றும் லேசானகாயமடைந்த மூன்று பேர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் உதவி அலுவலர் தாமோதரன்,சிவகாாசிி தீயணைப்பு, நிலைய அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன.
பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், ஆகியோர் ஆய்வு நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் ஆலையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

