மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி செலுத்திய பிறகு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பா.ஜ.கவினர் காரை வழிமறித்தனர்.அவர்கள் அமைச்சர் கார் மீது காலணியை வீசி அராஜகமாக நடந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து காலணி வீசியவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இச்சம்பலம் தொடர்பாக பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் பதுங்கியிருந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வயானை ஆகிய மூன்று பெண்களை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் தனலட்சுமி வீசிய காலணிதான் அமைச்சரின் கார் மீது பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.