விருதுநகர் அருகே தனியார் பேருந்து – கார் மோதி விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே தனியார் பேருந்து கார் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமுற்றனர். இந்த விபத்து நடந்தது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவில்பட்டியிலிருந்து கோவை நோக்கி 5 பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். விருதுநகர் மதுரை ரோடு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே சர்வீஸ் ரோட்டிலிருந்து எதிர்ப்புறம் உள்ள தலப்பாகட்டு பிரியாணி உணவகத்திற்கு உணவருந்துவதற்காக நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றுள்ளனர்.அப்போது மதுரையிலிருந்து கோவில்பட்டிக்கு சென்ற தனியார் பேருந்து ஆம்னி கார் மீது வந்த வேகத்தில் மோதியது. இதில் ஆம்னி கார் அடித்து இழுத்து செல்லப்பட்டு சர்வீஸ் சாலையில் இருந்த மற்றொரு உணவகம் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கோவில்பட்டி புதுக்கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (23),நவநீதன்(35),கோவை அன்னூரைச் சேர்ந்த ,கணேசன் (38)
ஆகியோர் படுகாயமடைந்தனர்.அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர்.
மேலும் உணவகத்தின் பரோட்டா மாஸ்டரும் கடையின் உரிமையாளரும் உள்ளே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்ததால் இருவரும் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.