• Fri. May 10th, 2024

திருவில்லிபுத்தூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது…

ByKalamegam Viswanathan

Sep 1, 2023

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்த சிவமணி என்பவரது வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு போனது. அதே நாளில் மதுரை சாலையில் உள்ள ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஸ்மார்ட் டிவி திருடு போனது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க, திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், கோவில்மதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமஜெயம் (30), மதுரை மாவட்டம், மேலூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42), ஈரோடு மாவட்டம், அக்கரைபாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (32) ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட 3 பேரிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவியை போலீசார் கைப்பற்றினர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *