• Sun. Jun 30th, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி

Byவிஷா

Jun 27, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம்தமிழர் கட்சிகளைச் சேர்ந்த 29 பேர் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது. வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியான தேமுதிக புறக்கணித்துவிட்டது.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 64 பேர் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான நேற்று (ஜூன் 26) 29 பேர்களில் யாரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற விருப்பம் தெரிவிக்கவில்லை.
மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற சின்னம் ஒதுக்கும் பணியில், இடைத்தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு உதயசூரியன், பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவுக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணி நடந்தது. இதில், 4 பேர் பானை சின்னத்தைக் கேட்டிருப்பதால், அவர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *