ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில், அதை ஏலத்தில் விற்க மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
டாடா குழுமத்தின் துணை நிறுவனமான தலாஷ் பிரைவேட் லிமிடெட் மற்ற போட்டியாளர்களை விட அதிக விலைக்கு, அதாவது 18 ஆயிரம் கோடிக்குக் கேட்டதால் கடந்த அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் மத்திய அரசு அதிகாரிகள், “மத்திய அரசு ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை டாடா குழுமத்திடம் வரும் 27-ம் தேதி ஒப்படைக்க உள்ளது” எனத் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான விஷயங்களை ‘ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதி இயக்குநர் வினோத் ஊழியர்களுக்கு இ-மெயில் மூலமாகத் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாள்களுக்கு பணிகள் கடுமையாக இருக்கும் என்றும் அதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏர் ஏஷியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மூன்றாவது விமானமாக ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.