இந்தியாவில் 9 ஆயிரம் கோடி அளவில் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை அறிவித்தது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. அதன்படி, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அன்று நள்ளிரவு முதல் நாட்டின் பணப் புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பணம் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்களும் வியாபாரிகளும் திண்டாடி போயினர்.
அதேசமயம், ரிசர்வ் வங்கி புதிய ரூ 500 மற்றும் 2,000 நோட்டுகளை வெளியிட்டது. பணப் புழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் இந்த புதிய ரூ.2,000 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதையடுத்து, 2018-19 நிதியாண்டில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி முற்றிலுமாக நிறுத்தியது.
இந்த நிலையில், பணமதிப்பிழப்பு பிரச்சனைகள் குறைந்துள்ளதாலும், நாட்டின் பண பரிமாற்றத்திற்கு இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதாலும் ரூ. 2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டுகள் செல்லாது அந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில் 9,760 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப் பெறவில்லை என்றும் இன்னும் அவை புழக்கத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ஏறத்தாழ 97.26 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.