ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் சக்திவேல் (45) என்பவர் அப்புகியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் 32 செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பின் மாலை வீட்டு அருகே உள்ள ஆட்டுப்பட்டியின் வெளிப்புறத்தில் மொளகுச்சிகளில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் படுத்து இருந்த சக்திவேல் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து குதறி இருப்பது தெரியவந்தது. இதில் 16 செம்மறி ஆடுகள் கழுத்துப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் மர்ம விலங்குகள் கடித்து குதறி உள்ளது. இறந்து போன ஆடுகள் சுமார் 2 லட்சம் மதிப்புள்ளதாகும். இதுகுறித்து சென்னம்பட்டி வனச்சரக அதிகாரிகளுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை சென்னம்பட்டி வனவர் பாலசுப்ரமணியம், குருவரெட்டியூர் கால்நடை மருத்துவர் கார்த்திகா, கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்திருந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சக்திவேல் குடியிருக்கும் பகுதி பாலமலை வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வனவிலங்குகள் ஏதேனும் ஆடுகளை கடித்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் ஆடு மாடு மேய்ப்பவர்களை அச்சப்படுத்தியுள்ளது.