காரைக்கால் மாவட்டம் மண்டபத்தூர் கடற்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு வரிச்சிக்குடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய பஞ்சமூர்த்திகள், மேலக்காசாகுடி ஸ்ரீவரதராஜ பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீவரதரராஜ பெருமாள், திருவேட்டக்குடி ஸ்ரீ திருமேனியழகர், வரிச்சிக்குடி ஸ்ரீ அகதீஸ்வரர் உள்ளிட்ட 17 சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக அஸ்திரதேவருக்கு மஞ்சள், திரவிய பொடி, சந்தனம், பால் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது சுவாமிகளை பக்தர்கள் சுமந்து அலைகளுக்கு இடையே சென்று சுற்றி வந்தனர். கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் கடல் நீரை வாரி சுவாமியின் மேல் அடித்து ஆரவாரம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாரணை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்கா, அருள்மிகு ஸ்ரீ திருமேனியழகர் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.வி.ஓமலிங்கம் மற்றும் வரிச்சிக்குடி, மண்டபத்தூர், மேலகாசாக்குடி கிராமங்களின் பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அதிகப்படியான பக்தர்கள் குவிந்ததால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.







