• Fri. Apr 26th, 2024

மதுரையில் உள்ள 85 நூலகங்களுக்கு 13 ஆயிரம் புத்தகங்கள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ByA.Tamilselvan

Jun 17, 2022

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறப்பட்ட நூல்களின் தொகுப்பை 85 நூலகங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
போட்டித் தேர்வுகளுக்காக நகர்ப்புற பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிராமப்புற மாணவர் களுக்கும் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கிராமப்புற மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தரும் நோக்கத் துடன் மதுரை எம்.பி. வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான 164 நூல்கள் கொண்ட தொகுப்பினை, மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம், முழு நேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்கள் ஆகிய 85 நூலகங்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், அனைத்து நூலகங்களுக்கும் இரும்பு புத்தக அடுக்குகளையும் வழங்கினார். இப்புத்தக தொகுப்புகளில் மொத்தம் 13,000 புத்தகங்கள் அடங்கும். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்தில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பொது நூலக இயக்குநர் (பொறுப்பு) இளம்பகவத், மதுரை யிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் மூர்த்தி, மதுரை மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், நூலகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *