• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

11 மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு..!

Byவிஷா

Jan 27, 2024

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக, செய்முறைத் தேர்வுகள் பிப்.12 முதல் பிப்.24ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குனரகம் சார்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,
தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்குமுன் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்.12 முதல் 24-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு பிப். 12 முதல் 17-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப். 19 முதல் 24-ஆம் தேதி வரையும் செய்முறைத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். இதையடுத்து மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பிப்ரவரி 5 முதல் 17-ஆம் தேதிக்குள் தேர்வுத் துறை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும். தேர்வின் போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், தேர்வுக்கு வருகை புரியாதவர்களின் விவரங்களையும் அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தேர்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முறையாக செய்ய வேண்டும். இதுதவிர செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.