டெல்லியில் இருந்து மதுரை வந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்து அதிமுக தொண்டர்கள் மதுரை ஏர்போர்ட்டையே திணறடித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திருமண நிகழ்ச்சி மற்றும் கோவில் வழிபாட்டிற்காக டெல்லி சென்றிருந்தார். ஆனால் இதனையறியாத மீடியாக்கள் டெல்லி பயணம் என்றதுமே ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பிரதமர் மோடி தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டன.
ஆனால் நமது அரசியல் டுடே செய்தித்தளம் மட்டுமே உண்மையை தெளிவாக வெளியிட்டது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வுமான ராஜவர்மனை தொடர்பு கொண்டு, எமது செய்தித்தளத்தின் தலைமை ஆசிரியர் பாக்யராஜ் கலந்துரையாடினார். அந்த பேட்டியில் மனம் திறந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், “இதுவேண்டுமென்றே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பரப்பப்படும் வதந்தி என்றும், அவர் உயிர் மூச்சுள்ள வரை அதிமுகவை விட்டு விலகமாட்டார்” என்றும் ஆணித்தரமாக அடித்துக்கூறினார். இதையடுத்தே அரசியல் வட்டாரங்கள் மற்றும் சோசியல் மீடியாக்களில் ஒரு தெளிவான பார்வை கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சேலத்தில் பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ராஜேந்திரபாலாஜி சொந்த வேலைக்காக டெல்லி சென்றுள்ளார். அவர் குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்பதை உறுதிபட தெரிவித்தார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில்தான் உள்ளார். பாஜகவில் இணைய மாட்டார்” என்று திட்டவட்டமாக கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சென்னையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஆகியோரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தனது டெல்லி பணிகள் குறித்து விவரித்தார். தொடர்ந்து இன்று மாலை சென்னையில் இருந்து மதுரை வந்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கட்சியின் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அலை கடலென திரண்டு வந்து ஆராவரத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர்.