அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பேசியதாவது: வரும் 16ம் தேதி முதல் கோவையில் தொடங்க உள்ள ஆசிர்வாத் யாத்திரை, மூன்று நாட்களுக்கு கோவை, திருப்பூர் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடப்பதாக தெரிவித்தார்.
திமுக அரசின் 100 நாட்கள் ஆட்சி நிறைவை பற்றி கருத்து தெரிவித்த அவர், அதிகாரிகள் நன்றாக பணியாற்றுவதாகவும், கொரோனா 2வது அலையை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கட்டுப்படுத்தியுள்ளதாகவும் பாராட்டினார்.
கடந்த மாதம் 19 லட்சம் தடுப்பூசி தமிழகத்துக்கு அதிகமாக வந்துள்ளது. இதை தி.மு.க., அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். ராணுவ தளவாட மையம் வாயிலாக, 2,000 கோடி முதலீடு வந்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இப்படி இணக்கமாக இருந்தால் முழு பயனும் கிடைக்கும் என தெரிவித்தார். பெட்ரோல் விலை குறைப்பு மக்களுக்கு நல்லது. ஆனால், பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டுவர கவுன்சில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை வரவேற்பதாகவும், ஆனால் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்தினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்துள்ளதாகவும், கோவைக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் என்றும், மேல் விசாரணை நடந்த பின், இதுகுறித்து பேசலாம் எனவும் கூறினார். காங்கிரஸ் ட்விட்டர் முடக்கப்பட பாஜக காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில், பாலியல் தொல்லைக்கு ஆளானவர் புகைப்படத்தை வெளியிட்டதால் தான், காங்கிரஸ் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது என விளக்கமளித்தார்.