ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி புகாரில் காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, புலன் விசாரணை என்னென்ன வருகிறதோ அனைத்தும் விசாரிக்கப்படும் என திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில் காவலர்கள் பயன்படுத்திய பழமை வாய்ந்த பொருட்களை காட்சிப் படுத்தும் வகையில் கண்காட்சி அமைப்பதற்கான பணிகளை ஆய்வு செய்த திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், புகார்கள் தொடர்பாக விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். போலீஸ் கஸ்டடியில் எம்.ஆர் கணேசனை எடுத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், மக்கள் இழந்த பணத்தை பறிமுதல் செய்வதற்கும், அந்த பணத்தை அவர்கள் எந்தெந்த வழியில் என்ன செய்திருக்கிறார்கள் என்பது குறித்து புலன் விசாரணையும் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், இதுவரை 20 கோடி ரூபாய்க்கு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 15 கோடி ரூபாய் மோசடி குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும், அதன் தொடர்பான முதற்கட்ட விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் கூறிய அவர், ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடியில் காவல்துறையினரும் மீதான புகார்கள் எழுந்திருப்பது தொடர்பான கேள்விக்கு புலன் விசாரணையில் என்னென்ன வருகின்றதோ அனைத்தையும் விசாரிப்போம் என்றார்.