தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தொற்று மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியதையடுத்து, பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்தந்த மாவட்டம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்
. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மால், ஜவுளிக்கடை, நகைக்கடை வணிக வளாகம், சூப்பர் மார்க்கெட் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படலாம். வ.உ.சி. மார்க்கெட், சின்ன கடை வீதியில் பூ, பழம், காய்கறி கடைகள் மாலை 6 மணி வரை இயங்கலாம். செவ்வாய்பேட்டை மெயின் ரோடு, நாவலர் நெடுஞ்செழியன், சாலையில் மாலை 6 மணி வரை மட்டுமே கடை இயங்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதி இல்லை.
மேட்டூர் அணை பூங்கா, கொங்கணாபுரம், விரகனூர் வாரச்சந்தைகளும் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் ஏற்காட்டிற்கு செல்ல இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி, மீன் சந்தைகளில் வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.