• Tue. Mar 19th, 2024

பொய் வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனைக் குழு நியமனம் : அதிமுக அதிரடி!…

By

Aug 12, 2021

பொய் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள ‘சட்ட ஆலோசனைக் குழு’-வை நியமனம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பலர் மீது, ஆளும் கட்சியினரின் தூண்டுதலால், பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்குகள் புனையப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.


கழகப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும், அல்லும் பகலும் அயராது ஈடுபட்டு வரும் கழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால். திமுக-வினரின் தூண்டுதலால் கழகத்தினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வகையில், கழகத்தின் சார்பில் “கழக சட்ட ஆலோசனைக் குழு” அமைக்கப்படுகிறது.


இந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், சி.வி. சண்முகம் மற்றும் மனோஜ் பாண்டியன், இன்பதுரை, பாபு முருகவேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்
நம் அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளைப் பதிவு செய்யும்போது, அத்தகையவர்களுக்கு கழக சட்ட ஆலோசனைக் குழு, அந்த வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும். எனவே, கழக உடன்பிறப்புகள், மேற்கண்ட குழுவினரை தொடர்புகொண்டு உரிய தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *