சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில், பண்டைய தமிழர்களின் வரலாற்றையும், வாழ்வியலையும் நிரூபிக்கும் விதமாக கீழடி, அகரம், மணலூர், கொந்தைகை ஆகிய 4 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.. இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் 2,600 வருடங்களுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஏழாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அகரம் அகழாய்வு தளத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அகரத்தில் ஏற்கனவே ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டு ஒன்பது அடுக்கு உறைகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு குழியில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய அழகிய வேலைப்பாடுகளுடன் அடங்கிய உறைகிணறு கிடைத்துள்ளது. இந்த உறைகிணறுவின் விட்டம் சுமார் 85 சென்டிமீட்டர், உயரம் 20 சென்டிமீட்டர் தற்போது வரை கணக்கிடப்பட்டுள்ளன. மேலும் மேலும் இவ்விரு உறைகிணறுகளை தொடர்ந்து ஆய்வு பண்ணும் பட்சத்தில் இதன் நீளம் ,அகலம், உயரம் , மற்றும் முழு பயன்பாடும் தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.