விக்கிரமங்கலம் அருகே ஜாமீனில் வந்த இளைஞர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில், வாலிபர் ஒருவர் மர்மக் கும்பலால் வழிமறித்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு, விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவரது மகன்களான சித்திக் சித்தார்த் ஆகியோருக்கும், மதுரை திருமங்கலம் அருகே செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் முத்தையா என்பவருக்கும் இடையே சோழவந்தான் அருகே மேலகால் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் இல்ல விழா நிகழ்வில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு முற்றிய நிலையில், ஏற்பட்ட மோதலில் முத்தையா என்பவர் அப்போது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சகோதரர்களான சித்திக் மற்றும் சித்தார்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த சித்திக் மற்றும் சித்தார்த், ஊருக்குள் வராமல் தலைமறைவாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு விக்கிரமங்கலம் அருகே மலையூர் பகுதியில் தனது நண்பர்களுடன் சித்திக் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த மர்மக் கும்பல் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சித்திக்கின் தலை, கை, கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர்கள் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர், சித்திக்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முத்தையா கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விக்கிரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



