வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அண்ணாபதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.1,00,000/- (ஒரு இலட்சம் மட்டும்)-க்கான காசோலை, ரூ.9,000/- மதிப்புள்ள ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. 2023-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ மட்டுமே 15.12.2022-க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.