உலக டுசென் தசைநார் சிதைவு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, மூலக்கூறு கண்டறிதல், ஆலோசனை, பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) சார்பில் 13-வது விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

“அணுகல் வாழ்க்கையை மாற்றுகிறது – வாய்ப்பு, சமத்துவம், சமூக உள்ளடக்கம்” என்ற நிகழாண்டுக்கான கருப்பொருளை முன்னிறுத்தி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கமாகப் பிரார்த்தனை, விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் பலூன்களைப் பறக்கவிடும் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட புதிய பிரத்யேக ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, வாழ்வாதார மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான ஆலோசனைக் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் சுபாஷ் காந்தி கலந்து கொண்டார். மேலும், எஸ்.எல்.பி. தகவல் தொழில்நுட்ப மையத்தின் தலைவர் சத்யா துலிபாலா, ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் கே. மாதேஸ்வரன், நியூ ஸ்கிரிப்ட் டேட்டா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சித்ரா மனோகர், ரெட் டாக்ஸி இயக்குநர் மனோஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இது தொடர்பாக எம்டிசிஆர்சி அமைப்பின் நிறுவனர் டாக்டர் பி.ஆர். லட்சுமி பேசுகையில்,
எங்கள் அமைப்பு கடந்த 2011-ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து டுசென் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசுடன் இணைந்து 2016 முதல் 2022 வரை மாநிலம் முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை வழங்கி வருகிறோம்.

மருத்துவ உதவிகளுடன் நின்றுவிடாமல், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ரெட் டாக்ஸி நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறோம். இதுவரை நான்கு பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்டு வேலை தேடும் இளைஞர்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டு உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம் என்றார்.








