திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடப்பதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. இது, போலியானது, என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் வெளியிடும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை நம்பி ஏமாற வேண்டாம். கடந்த காலங்களில், தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து, பணம் பறித்த சம்பவங்கள் நடந்துள்ளன. அத்தகைய நபர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேலை வாய்ப்பு தொடர்பாக தேவஸ்தான இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வேலை வாங்கி தருவதாக வெளியிடப்படும் போலி விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம்’ என அதில் கூறப்பட்டுள்ளது.