ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவோம் என்றும் அதனை அமெரிக்கா தடுக்க முடியாது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் நிதி மந்திரி இஷாக் தார், துபாயில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, அமெரிக்காவுக்கு கடந்த மாதம் சென்றபோது, அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகளை சந்தித்து பேசினேன். அதில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரம் பற்றி ஆலோசிக்கப்பட்டது என கூறினார். சர்வதேச சந்தையில் நிலவும் விலையை விட குறைந்த விலைக்கு ரஷியாவின் எண்ணெய் விற்கப்படுகிறது. அதனால் இந்தியா எப்போதும், சர்வதேச சந்தை விலையை விட 30 சதவீதம் குறைவான விலைக்கு ரஷிய எண்ணெயை வாங்குகிறது என்று அவர் கூறியுள்ளார். இம்ரான் கான்
தலைமையிலான அரசு ரஷிய அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி, குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கும் ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்ய இருக்கிறோம் என தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், ரஷியா இதனை மறுத்தது. பாகிஸ்தானில் எரிபொருள் நெருக்கடியான சூழல் தற்போது காணப்படுகிறது. அதனால், ரஷியாவிடம் இருந்து குறைவான விலையில் ரஷிய எண்ணெயை வாங்கும் தனது விருப்பத்தினை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முன்பே ரஷியாவிடம் தெரிவித்து விட்டது. ரஷிய எண்ணெய்யை நாங்கள் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா அதனை தடுக்க முடியாது. அதுபற்றி அமெரிக்க அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. ஏனெனில், பாகிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவும், ரஷிய எண்ணெய்யை வாங்குகிறது. அதன்படி, எங்களது அமைச்சகமும் ரஷிய எண்ணெய்யை வாங்கும். அதற்கான முக்கிய நடவடிக்கைகளை வருகிற மாதங்களில் அரசு மேற்கொள்ளும் என அவர் கூறியுள்ளார். சவுதி அரேபியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனும் பாகிஸ்தான் நிதி சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.