• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சதுரகிரி மலையில் மீண்டும் காட்டுத்தீ – பக்தர்களுக்கு அனுமதி ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..,

ByKalamegam Viswanathan

Aug 12, 2026

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் மலை, ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்த வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை வனத்துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர், காட்டுத்தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக வனத்துறையினரிடம் இருந்து தகவல் வரப்பெற்றதை அடுத்து, நாளை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி உண்டு என மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இன்று இரவு சுமார் 7.00 மணியளவில் சதுரகிரி மலை வனப்பகுதியில் காட்டுத்தீ மீண்டும் பரவியுள்ளதாக மதுரை மாவட்ட வன கண்காணிப்பாளரிடம் இருந்து தகவல் வரப்பெற்றுள்ளது.

தற்போது காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி, நாளை சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது நிலவும் காட்டுத்தீயினால் பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை கருத்தில் கொண்டு, இயல்பு நிலை திரும்பும் வரை, நாளை சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை சீரான பிறகு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்வதற்கான அனுமதி குறித்து மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.