உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம கொண்டாடப் படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதனை உருவாக்கியவர் யார்? மகளிர் தினத்துக்கு பின்னாலும் ஒரு போராட்ட வரலாறு உள்ளது. சர்வதேச மகளிர் தினத்தின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொழிலாளர் இயக்கங்கள் மற்றும் பெண்ணிய இயக்கங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. 18ம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே என்று முடக்கிவைக்கப்பட்ட நிலை மெல்ல மாறி, 1850 களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் கால்பதிக்க தொடங்கினர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணியில் கால்பதித்தாலும் அவர்களுக்கான ஊதியத்தில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டது. ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது.
இதனால் கொதித்தெழுந்த பெண்கள் 1910-ம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தினர். இந்த மாநாட்டில் ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின் தலைமையில் தங்கள் உரிமைகளுக்காக பெண்கள் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக நின்றனர். அந்த மாநாட்டில் கிளாரா, பெண்களின் உரிமைகளை பேச உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
அடுத்து 1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் புரட்சி
உலகை திரும்பிப்பார்க்க வைத்தது. இந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சியே கவிழ்ந்தது என்பது வரலாறு. இதனையடுத்து 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார்.
ரஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில் புரட்சி நடந்த மார்ச் 8-ம் தேதி மகளிர் தினமாக நடத்த வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அதைத் தொடர்ந்து, 1918ஆம் ஆண்டில், ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சர்வதேச மகளிர் தினம் பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதற்கான ஒரு முக்கிய நாளாகும். இந்த நாள் பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.சர்வதேச மகளிர் தினம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாலின சமத்துவத்தை அடைவதற்கும் உலகளாவிய நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்திற்கு ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இந்த கருப்பொருள்கள் பெண்களின் வாழ்க்கையில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்துக்கு ஐநா மகளிர் அமைப்பு ஒரு கருப்பொருளை முன்மொழிகிறது. அதன்படி இந்த ஆண்டு “செயல்களை துரிதப்படுத்து”என்ற கருப்பொருள் முன்மொழியப்பட்டுள்ளது. மனிதகுலத்தில் தாயாக, தரமாக, தமக்கையாக, தோழியாக வலம்வரும் மங்கையர் குலத்தை போற்றுவோம் இந்நாளில்.