• Mon. May 6th, 2024

நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்

Byவிஷா

Feb 9, 2024

நாடாளுமன்றத்தில் இந்தியநாட்டின் பொருளாதார நிலை குறித்தும், பொது நிதி நிலைமை குறித்தும் முழுமையாக விவரிக்கும் வகையில், 54 பக்கம் உள்ள வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு, 2ஜி அலைக்கற்றை முறைகேடு, சாரதா நிதி நிறுவன முறைகேடு என ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், நிகழ்ந்த 15 முறைகேடுகளைப் பட்டியலிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் ஊழல் வழக்குகள் பொருளாதாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்திருந்ததாக ’ என்று குறிப்பிட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-இல் பதவியேற்கும்போது நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது. பொருளாதாரத்தைப் படிப்படியாக மேம்படுத்தும் வகையில் நிர்வாகச் சீர்திருத்தங்களை பெருமளவில் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருந்தது.
பொருளாதார நடவடிக்கைகளை எளிதாக்குவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முழுமையாகத் தோல்வியுற்றது. பொருளாதார நடவடிக்கைகளுக்கான தடைகளையும் அந்த அரசு ஏற்படுத்தியதால், பொருளாதாரம் சரிவைச் சந்தித்தது. பலவீனமான, செயல்பாடற்ற தலைமை காரணமாக நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
செலவு மிகுந்த திட்டங்கள் மற்றும் தீர்வுகள் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2013-இல் கடுமையாகக் குறைந்துள்ளது. 2004-ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் 17 மாத இறக்குமதிகளுக்குப் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்த நிலையில், 2013-இல் 6 மாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய அளவில் மட்டுமே கையிருப்பு இருந்தது. இந்த நெருக்கடியான சுழலில் 2014-இல் ஆட்சிப் பொறுப்பேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு,பொருளாதாரத்தை மேம்படுத்த சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது.
முந்தைய அரசு போன்று அல்லாமல், பொருளாதாரத்தின் அடித்தளங்களில் முதலீடுகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்டு, வலுவான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கியது. இந்த நடவடிக்கைகள் காரணமாக, உலகளாவிய சூழல் மிகப் பெரும் சவாலை சந்தித்த நிலையிலும், சிறந்த முன்னேற்றங்களைப் பதிவு செய்துவந்த இந்தியா, தற்போது உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, முந்தைய அரசு விட்டுச் சென்ற சவால்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் என உறுதியாகக் கூற முடிகிறது. நாடு இப்பொது இருக்கும் செழிப்பான பாதையில் சென்றால் வரும் 2047-இல் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும் இலக்கை அடைய முடியும்.
இதற்காக நாம் இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *