உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஒப்புதல் தெரிவித்துளள்தாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ரஷ்யா, உக்ரைனில் தனித்தனியாக அரசு முறை பயணம் மேற்கொண்ட அவர், இரு நாடுகளின் அதிபர்களிடமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில், கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் உக்ரைன் போரில் அமைதி மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தேவை பற்றி பேசியுள்ளனர். நீண்டகால அமைதியுடன் இந்த போர் முடிவுக்கு வருவதற்கான தேவை பற்றி அவர்கள் இருவரும் பேசி ஒப்பு கொண்டதுடன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான தேவை பற்றியும் வலியுறுத்தினர்.
இதேபோன்று ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் தேவைகள் மற்றும் வேண்டுகோள்களுக்கேற்ப, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் டிரம்ப் பேசினார் என லெவிட் கூறியுள்ளார். போரில் செலவிட்ட தொகையை மக்களின் தேவைக்கு சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார் என்று கூறிய லெவிட், எரிசக்தி உட்கட்டமைப்புகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தற்காலிக அடிப்படையில் நிறுத்தப்படும் என கூறினார். அதற்கான உத்தரவை புதின் பிறப்பித்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன. எனினும், ஒரு விரிவான போர்நிறுத்த ஒப்பந்தம் அவசியம் என அமெரிக்கா கூறியதும், இந்த தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தியது என சிஎன்என். வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.