• Thu. Mar 28th, 2024

95 சதவீதம் வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? ஜே.பி.நட்டாவுக்கு எம்.பி.க்கள் கேள்வி

ByA.Tamilselvan

Sep 23, 2022

95 சதவீதம் பணி முடிந்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள்” என்று, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரும், மதுரை எம்பி வெங்கடேசனும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறில் இருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை பிரதமர் திறந்து வைப்பார்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், 95 சதவீதம் பணி முடிந்த எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் என்று எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை எய்ம்ஸ் பணிகளை 95 சதவீதம் முடிந்த ஜே.பி.நட்டாவிற்கு நன்றி. நானும், மதுரை எம்பியும் தோப்பூரில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி நானும், மாணிக்கம் தாக்கூரும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *