
“வலிமை’ படத்தில் நடித்ததற்காக அஜித் சார் மிகவும் பெருமைப்பட்டார்” என்று படத்தின் இயக்குநரான எச்.வினோத் கூறியிருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘வலிமை’. அஜித் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் எச்.வினோத்.
படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், “வலிமை வெறும் ஆக்ஷன் படம் அல்ல…” என்றும் கூறுகிறார் இயக்குநர். படம் தொடர்பாக இயக்குநர் எச்.வினோத் அளித்த பேட்டியில், “வலிமை’ ஒரு சரியான குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இது சமூக பிரச்சினைகளையும் பேசுகிறது. குடும்பப் படம் என்று சொல்லும்போது, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்ல, அது ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனை, அது எப்படி ஒரு குற்றத்தில் விளைகிறது.. ஹீரோ எப்படி அந்தக் குற்றத்தை தன் குடும்பத்தைச் சிதைக்காமல் தடுக்க முயல்கிறார். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்…” என்கிறார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு எங்கள் திட்டங்களை சீர்குலைத்தாலும், இந்த வழியில் சில நன்மைகள் நடந்துள்ளது. நாங்கள் படத்தை தீபாவளிக்கு வெளியிட விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு, டிசம்பர் அல்லது பொங்கல் ரிலீஸ் என்று நினைத்தோம், அதையும் செய்ய முடியவில்லை.உண்மையில், கொரோனாவின் ஒவ்வொரு அலையும் எங்களுக்கு வெவ்வேறு சிக்கல்களைக் கொண்டு வந்தன. ஆனால் தாமதங்கள் மேலும் இரண்டு மொழிகளில் படத்தை வெளியிட எங்களுக்கு உதவியது என்று நான் உணர்கிறேன்.
நடிகர்கள் தேர்வு நேரத்தில்கூட, படக் குழு படத்தை ஒரு பான்-இந்தியா படமாக திட்டமிட்டது. தற்போதைய காலக்கட்டத்தில் OTT பிளாட்ஃபார்ம்கள் வெற்றி பெறுவதால், நீங்கள் திரையரங்குகளில் வெளியிடாவிட்டாலும் கூட, உங்கள் படம் ஒரு இந்தியப் படமாக மாறும் சாத்தியம் உள்ளது. ஏனெனில், அவர்களே படத்தை பல மொழிகளில் டப் செய்கிறார்கள்…” என்றார்.
படம் குறித்து அஜித் என்ன கூறினார் என்பது குறித்து எச்.வினோத் கூறுகையில், “அஜித் சார் என்னிடம், “இந்தப் படத்தை செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார். இந்த படத்தை செய்ததில் நானும் பெருமைப்படுகிறேன்.” என்றார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த ‘வலிமை’ படம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக இது வெளியாகிறது.
