• Thu. Apr 25th, 2024

நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம்-அமைச்சர் அன்பில் மகேஷ்

ByA.Tamilselvan

Sep 8, 2022

நீட்தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெருவோம் என நம்பிக்கை இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு எம்எல்ஏவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பல்வேறுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது… , “நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும், நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஹைடெக் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மனரீதியாகவும் அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் உயர் கல்வி வழிகாட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல் ஹெல்ப் லைன் நம்பர்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம். அதனால் நீங்கள் ஒன்றும் சாதிக்க போவதில்லை. மாறாக, பெற்றோருக்கும் இந்த சமூகத்துக்கும் நீங்கள் கவலையை கொடுத்துவிட்டு செல்கிறீர்கள் என்பதே உண்மை.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒட்டு மொத்த கட்சிகள் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு ஜனாதிபதி வரை கொண்டு சென்று இருக்கிறோம்.
சமீபத்தில் கேரளா வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *