• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திற்பரப்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15-நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதோடு அணைகளும் நிரம்பி வருகின்றன.

முக்கிய அணைகளான 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 43.42 அடியாக உயர்ந்தது. இதனால் இந்த அணையில் இருந்து வினாடிக்கு 1938 கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்து வருகிறது. இதுபோல் 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2, ஆகிய இரண்டு அணையில் இருந்து 300 கன அடி உபரிநீரும் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரிநீர் என மொத்தம் 3100 கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் கோதையார், பரளியார் மற்றும் தாமிரபரணி ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குமரி குற்றாலம் எனப்படும் தீற்பரப்பு அருவியிலும் இரண்டாவது நாளாக தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இங்கு வரும் தண்ணீர் தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆர்பரித்து கொட்டுவதோடு கல் மண்டபம் மற்றும் நீச்சல் குழத்தையும் மூழ்கடித்து செல்கிறது.

தாமிரபரணி ஆற்றின் கரையோரம் மிக தாழ்வான பகுதிகளான வள்ளக்கடவு திக்குறிச்சி, சிதறால், முஞ்சிறை உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து வாழை, ரப்பர் மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்ற விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.