இன்று (ஜன.10) முதல் வரும் 14ம் தேதி வரை, தபால் நிலையங்களில் ‘தங்க பத்திரம்’ விற்பனை செய்வதால், பொதுமக்கள் முதலீடு செய்து பயனடையலாம் என தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் கூறினார்.
அவர் மேலும் நமது நிருபரிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடுகிறது. தேனி மாவட்டத்தில் அனைத்து தலைமை, துணை தபால் நிலையங்களில் இன்று (ஜன.10) முதல் வரும் 14ம் தேதி வரை 5 நாட்கள் மட்டும் தங்க பத்திரம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை பத்திரம் பெறலாம். ஒரு கிராம் ரூ. 4,786 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு தொகைக்கு ஏற்ப 2.5 சதவீதம் வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். திட்டம் முடிந்து, 8 ஆண்டுகளுக்கு பின் 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு தபால் நிலையங்களை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். உதவி கோட்ட சண்காணிப்பாளர் எம்.ஜனகராஜ் உடனிருந்தார்.