விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்தில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம வருவாய் ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார கிளை தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம வருவாய் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, தமிழ்நாடு அரசு, கிராம உதவியாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்குவதை நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு வழங்கி வந்த எரிபொருள் படி பணத்தை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும், அரசு ஊழியர் பட்டியலில் டி-பிரிவை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. காத்திருப்பு போராட்டத்தில், கிராம வருவாய் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.