பெட்ரோல் மீதான வாட் வரியில் 4 ரூபாயும், டீசல் மீதான வாட் வரியில் 5 ரூபாயும் குறைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததாக முதல்வர் அறிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது.இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் முறையே ரூ.5, 10 என மத்திய அரசு குறைத்தது. அதுமட்டுமின்றி, பாஜக ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியையும் குறைத்தன. இதனையடுத்து, எதிர்பார்த்ததை விட விலை குறைந்ததால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானிலும் பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல் மீதான வாட் வரியில் 4 ரூபாயும், டீசல் மீதான வாட் வரியில் 5 ரூபாயும் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.