• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் வைகாசி உற்சவ விழா

Byகுமார்

May 31, 2024

மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் உள்ளது மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில். இந்த கோவிலின் 72 ஆவது ஆண்டு வைகாசி உற்சவ விழா கொடியேற்றம் மே17ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 24ம் தேதி காப்பும் கட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வாக இன்று காலை 5 மணி முதலே 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலில் அலகு குத்தியும்,பால் குடம் சுமந்துவந்தும், வேல்குத்தியபடியும், பறவை காவடி எடுத்தபடியும் ஊர்வலமாக வைகை ஆற்றிற்கு சென்று அங்கு அம்மனுக்கு பூஜை செய்தனர்.

இதில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேல் குத்தியபடியும், 50க்கும் மேற்பட்டோர் 5 அடுக்கு, 3 அடுக்கு என 50 அடி முதல் 30 அடி வரை பறவை காவடி, தேர்காவடி, பால்காவடி, எடுத்தும் தங்களது நேர்த்திகடன்களை செலுத்திவருகின்றனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றதால் மாநகர் சாலைகள் முழுவதிலும் திருவிழா கோலம் பூண்டது.

காவடி எடுத்துசெல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகள், உறவினர்களின் குழந்தைகளை கையில் எடுத்து ஆசிர்வதிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்த விழாவினை தொடர்ந்து நாளை ஊர்ப் பொங்கல், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் , 3ஆம்தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.

இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அலகு குத்தியும், மீனாட்சியம்மன், கருப்பசாமி, பத்ரகாளி வேடமணிந்தபடியும் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் பக்தி கோஷம் முழங்கியபடி காவடி எடுத்துவந்தனர். 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.