• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பொது இடங்களுக்குள் நடமாட தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Byகாயத்ரி

Dec 13, 2021

புதுச்சேரியில் கட்டாய தடுப்பூசி சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொது இடங்களுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரியை மாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் முகாம்களை அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில், வில்லியனூரில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி முழுவதும் தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்கள் பரிசோதனை செய்யப்படும் என்றார்.

புதுச்சேரியில் இதுவரை 14 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறிய தமிழிசை, மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்களை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொது இடங்களுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் மருத்துவர்களும், செவிலியர்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதை தமிழிசை பாராட்டினார்.