• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மத்திய பட்ஜெட் – கோவையில் உள்ள இந்திய வர்த்தக சபை வரவேற்பு

BySeenu

Jul 23, 2024

இன்று அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அறிவிப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கோவையில் உள்ள இந்திய வர்த்தக சபை நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மத்திய பட்ஜெட்டின் பல்வேறு அறிவிப்புகள் தொழிற்துறையினர் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை இந்திய வர்த்தக சபையின் தலைவர் ஸ்ரீராமுலு பேசுகையில், அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை சாமானிய மக்களுக்கு பயன் தரும் எனவும், மாணவர்களுக்கு வட்டி மானியத்துடன் கல்வி கடன் உதவி வழங்குவது வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 11 லட்சம் கோடி மதிப்பீட்டில் நாட்டின் சாலை, ரயில்வே மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என கூறினார்.

மேலும், மருத்துவ உபகரணங்கள், செல்போன் உபகரணங்கள், காப்பர் உலோகம், தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி மற்றும் சுங்கவரி குறைக்கப்பட்டு இருப்பது அவை சார்ந்த தொழில்களை மேம்படுத்தும் எனவும், கோவிட் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் புதிய கடன் உதவி, நெருக்கடியில் உள்ள தொழில் நிறுவனங்களை மேம்படுத்த உதவும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கோவை இந்திய வர்த்தக சபையின் துணைத் தலைவர் சுந்தரம், ‘சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டிற்கான சிறப்பான திட்டங்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Credit guarantee கடன் உதவித்தொகையை 100 கோடி அளவிற்கு உயர்த்தி இருப்பது பிணையில்லாத கடன் உதவி பெற்று தொழிலை மேம்படுத்த உதவும். முத்ரா கடனுதவி திட்டத்தில் 20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி அளிப்பது சிறு குறு தொழில்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும்.

SIDBI வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, 12 புதிய SIDBI வங்கிகள் இந்த ஆண்டில் துவங்கப்படும் என்ற அறிவிப்பு சிறு குறு தொழில்களை மேம்படுத்தும் அறிவிப்பாக உள்ளது’ என தெரிவித்தார்.