• Wed. Mar 19th, 2025

புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் புகுந்த இருவர் கைது!

Byஜெபராஜ்

Feb 21, 2022

புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் மர்மநபர்கள் புகுந்ததால் இரண்டு மணி நேர சாலை மறியலில் 150 பேர் மீது வழக்கு போக்குவரத்து பாதிப்பு இருவர் கைது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி எஸ்.வீராச்சாமி கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிகை பணி நாளை நடைபெற உள்ள நிலையில், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, ராயகிரி ஆகிய ஊர்களில் வாக்கு சேகரித்த பெட்டிகளை மூன்றடுக்கு பாதுகாப்பில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சொகுசு காரில் வந்துள்ளது. கல்லூரியின் முன்பகுதியில் உள்ள கேட்டில் உள்ள காவலாளியிடம் ஏமாற்றி உள்ளே புகுந்தனர். இதை வெளியில் இருந்து நோட்டமிட்டவர்கள் மருத்துவர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் உள்ளே எதற்காக செல்கிறது என்று கேட்டின் அருகே சென்று நோட்டமிட்டனர். ஆனால் உள்ளே சென்ற காரை மூன்றடுக்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் முதல் அடுக்கிலேயே காரை மடக்கி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதைக்கண்ட வெளியில் இருந்த பொதுமக்கள் காரை உள்ளே வைத்து அடைத்து விட்டு காரில் இருந்தவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். மீதமிருந்த இருவர் சிக்கினர். சம்பவம் அறிந்த டிஎஸ்பி கணேஷ் மற்றும் புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம் சப்-இன்ஸ்பெக்டர் பரத் லிங்கம் தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் சிக்கிய இருவரையும் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து அத்துமீறி உள்ளே சென்ற குற்றத்திற்காக கைது செய்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் வாசுதேவநல்லூரை சேர்ந்த காஜா முகைதீன் மற்றும் நாகூர் கனி என்பது தெரியவந்தது.

தகவலறிந்த வேட்பாளர்கள் மற்றும் வாக்களித்த வாக்காளர்கள் என 400 க்கும் அதிகமானவர்கள் கல்லூரியின் கேட்டை திறக்க விடாமல் மரித்தனர். பின்பு எதிரே இருந்த சங்கரன்கோவில் புளியங்குடி சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து சாலையில் அமர்ந்து சுமார் 2 மணிநேரம் சாலை மறியல் செய்தனர். சொகுசு காரை வெளியில் விடாமல் ஒரு கோஷ்டியாக மறியல் செய்தனர். பின்பு புளியங்குடி டிஎஸ்பி கணேஷ் கட்சிப் பொறுப்பாளர்கள் அதிமுக நகர செயலாளர் பரமேஸ்வரன் பாண்டியன், முன்னாள் நகர செயலாளர் சங்கரபாண்டியன், ரோஷன் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா ஆகியோரை அழைத்து உள்ளே இருந்த சிசிடிவி காட்சிகளை காட்டினார்.

அதில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த சொகுசு கார் மற்றும் மர்ம நபர்கள் உள்ளே வரவில்லை என்பதைக் காட்டினார். அதனால் சாலை மறியலை கைவிடும்படி கூறினார். அதனால் சாலை மறியலை கைவிட்டு படிப்படியாக மக்கள் கலைந்து சென்றனர். இரவு 2 30 மணி வரை கல்லூரி வாசலில் பல வேட்பாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. அதனால் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பல வேட்பாளர்கள் கூறும்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பவ இடத்துக்கு வந்து ஓட்டுப் பெட்டிகள் உள்ள இடத்தருகே கண்காணிக்க எங்களுக்கும் அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷம் எழுப்பினர் இதனால் புளியங்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.