மருங்கூரை அடுத்த இராமநாதிச்சன் புதூரை சேர்ந்தவர் கபிரியேல் நவமணி மகன் லியோன் பிரபாகரன். இவருக்கும் குமாரபுரம் தோப்பூரைச் சேர்ந்த திருமாலை பெருமாள் மகன் பிரபாகரன் என்பவருக்கும் ஒரு பெண் தொடர்பு விஷயமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 13-ஆம் தேதி இரவு 8 மணி அளவில் லியோன் பிரபாகரனின் நண்பரான இராமநாதிச்சன் புதூரை சேர்ந்த ஸ்டீபன் மகன் ரோஜ்அஜெய் ஜாண்சன் என்பவரிடம் போன் மூலம் நீ எப்படி அந்தப் பெண்ணிடம் போன் நம்பரை கேட்பாய் என கேட்டு உனது தலையை எடுத்து விடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் இரவு 11 மணியளவில் லியோன் பிரபாகரன் தனது நண்பர்கள் ரோஜ்அஜெய் ஜாண்சன், ஆரிஸ், ஜெகன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் குமாரபுரம் தோப்பூர் முருகன் கோவில் ஆலமூடு பக்கம் வந்து கொண்டிருந்த போது அவர்களை பிரபாகரன் மற்றும் குமாரபுரம் தோப்பூரைச் சேர்ந்த கண்ணன், மருங்கூரைச் சேர்ந்த அமலு ஆகியோர் அரிவாள், கத்தியுடன் வழிமறித்து தகராறு செய்து ரோஜ்அஜெய் ஜாண்சன் என்பவரை சரமாரியாக வெட்டியும் தாக்கியும் உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ரோஜ்அஜெய் ஜாண்சனை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து லியோன் பிரபாகரன் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.