தெலங்கானா அரசு தனது செல்போனை ஒட்டுக்கேட்பதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழிசை தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து அம்மாநில அரசுக்கும், அவருக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்கிறது. இந்நிலையில், எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக டிஆர்எஸ் கட்சி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கவர்னர் தமிழிசையின் முன்னாள் பாதுகாவலர் ஏடிசி துஷார் என்பவருக்கு தொடர்பு இருக்கிறது எனவும் அதில் ராஜ்பவனும் சம்பந்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது.
தீபாவளி வாழ்த்து சொல்ல துஷார் தன்னை தொலைபேசியில் அழைத்தார் என்றும், அவர் தொலைபேசியில் அழைத்தது டிஆர்எஸ் கட்சிக்கு எப்படி தெரிந்தது என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். எனவே தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது என கூறியுள்ளார். மேலும் இது தனது தனியுரிமையில் தலையிடும் விஷயம் எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொள்வது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்காதது என பல்வேறு காரணங்களுக்காக தெலங்கானா அரசு தமிழிசையை குற்றம்சாட்டி வரும் நிலையில், இவரது குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.