

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது, சிவகாசி நட்டாத்தி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவில். இக்கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக நேற்றைய முன் தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கிய யாக சாலை பூஜை, ஐந்து காலங்களாக யாக பூஜைகள் செய்யப்பட்டு இன்று கடம் புறப்பாடாகி இரட்டை விநாயகருக்கும், காவல் தெய்வமான தெப்பத்து கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பத்திரகாளியம்மன் கோவிலின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் மூல ஸ்தானத்தில் உள்ள பத்திரகாளியம்மனுக்கு புனிதநீர், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை, சிவகாசி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் விழா கமிட்டியினர் சார்பில் வழங்கப்பட்டது.

