திண்டுக்கல் மாநகராட்சி 29வது வார்டு, சுயேட்சை வேட்பாளர் ‘தெம்மாங்கு’ பாட்டுச் சத்தம் முழங்க, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இச்செயல் வார்டு மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.
மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சியில் 47 வார்டுகள் உள்ளன. வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.,- அ.தி.மு.க.,- பா.ஜ.க.,- தே.மு.தி.க.,- உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களுடன், சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் குதித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தான் ‘வம்பு’ வரும் என நினைத்து, பெரும்பாலான ‘துண்டு’ கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். வார்டு பிரமுகர்கள் மட்டுமின்றி ரோட்டில் வாக்காளர்களை எங்கு பார்த்தாலும் யோசிக்காமல் உடனே சட்டென்று தோளில் துண்டை (சால்வை) போர்த்தி, வணங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வசதி படைத்த வேட்பாளர்கள் சிலர் ‘டிரம்செட்’ முழங்க வார்டில் வலம் வருவதை காணமுடிகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வேட்பாளர்களின் வருகையால் வார்டு பகுதிகள் களை கட்டி வருகின்றன. 29வது வார்டில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள வேட்பாளர் நாகஜோதி, தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். மற்ற வேட்பாளர்களை விட, சற்று வித்தியாசமாக ‘தெம்மாங்கு’ பாட்டுச் சத்தம் முழுங்க வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனால், இவர் செல்லும் இடங்களில் சிறுசு முதல் பெருசு வரை ரசிகர்கள் பட்டாளம் கூடிவிடுகிறது. பாட்டு உற்சாகத்தில் இடுப்பில் கை குழந்தை இருப்பதைக் கூட மறந்த நிலையில் பெண் ஒருவர் ‘குத்தாட்டம்’ போட்டது, கூட்டத்தில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.