• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் திருட்டு

ByKalamegam Viswanathan

Dec 31, 2024

ரயில் பயணிகளுக்கு உதவுவதாக கூறி ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகளை 6ஆண்டுகளாக திருடி வந்த ரயில்வே மெக்கானிக்துறை உதவியாளர் கைது- 250க்கும் மேற்பட்ட பேக்குகள் , 30 பவுன் நகைகள், 30 செல்போன்கள், 9 லேப்டாப் உள்ளிட்டவைகள் பறிமுதல்

மதுரை ரயில்வே நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரயிலில் செல்ல வந்த பயணியான மூதாட்டி ஒருவர் தான் வைத்திருந்த பையை உதவுவதாக கூறி, ஒரு நபர் திருடி சென்று விட்டதாகவும் அதில் 15 பவுன் தங்க நகை இருப்பதாகவும் கூறி ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மூதாட்டி குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில் மூதாட்டியிடம் ஒரு நபர் உதவுவது போல கூறி அவரது பேக்கை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஈரோடு ரயில்வே மெக்கானிக் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது. திருச்சி இருப்புப் பாதை எஸ்.பி்.ராஜன், டி.எஸ்.பி. சக்கரவர்த்தி , ஆய்வாளர் காமாட்சி, ஜெயா பிரிட்டோ தனிப்படை காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.செந்தில்குமார் திருடிய பேக்குகளை பறிமுதல் செய்வதற்காக HMS காலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்த செந்தில்குமாரின் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு 100க்கும் மேற்பட்ட பேக்குகள் திருடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது அதனை சோதனையிட்ட போது அதில் நகைகள் லேப்டாப் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களும் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து செந்தில்குமார் இடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஈரோடு பகுதியில் உள்ள வீட்டிலும் ஏராளமான பேக்குகளை ரேக் வைத்து அடுக்கி அதில் உள்ள பொருட்களை எடுத்து பயன்படுத்தி வந்ததும் அதனை எந்த இடத்திலும் விற்பனை செய்யாமல் அவரே பயன்படுத்தி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஒட்டு மொத்தமாக மதுரை மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள அறைகளில் மட்டும் 30 பவுன் நகைகள் 250 பேக்குகள் ஏராளமான 30 செல்போன்கள் மற்றும் 9 லேப்டாப், 2 ஐபேட் மற்றும் செல்போன் சார்ஜர் , ஹெட்செட் செருப்புகள் உள்ளிட்டவைகளை திருடி அடுக்கி வைத்திருந்துள்ளார். தொடர்ந்து இருப்பு பாதை காவல்துறையினர் செந்தில்குமாரிடம் தீவிர விசாரணை நடத்திய போது, செந்தில்குமார் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை திகைக்க வைத்துள்ளது. விசாரணையில் செந்தில்குமார் கடந்த 6 ஆண்டுகளாக மதுரை , கரூர், விருதாச்சலம், ஈரோடு, திருநெல்வேலி போன்ற பல்வேறு ரயில் நிலையங்களிலும் தனியாக செல்லக்கூடிய ரயில்வே பயணிகளை குறிவைத்து அவர்களுக்கு மே ஐ ஹெல்ப் யூ எனக் கூறி உதவுவது போல அவர்களுடைய பேக்குகளை திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து செந்தில்குமார் திருடி பதுக்கி வைத்திருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்த இருப்புபாதை காவல்துறையினர் மெக்கானிக் உதவியாளரான செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்.