• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் மிகவும் மோசமான சாலை – தேவகோட்டை நெடுஞ்சாலை…

சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் பழமையான நகராட்சி என்றால் அது தேவகோட்டை மட்டுமே, என்று மாவட்ட மக்களால் கூறப்படுகிறது. திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய அனைத்து பயணிகள் பேருந்து இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றன.

ஏராளமான சுற்றுலா பேருந்துகள், கனரக வாகனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லக்கூடிய மிகவும் பரபரப்பான சாலை இது.

கடந்த சில வருடங்களாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இந்தச் சாலையை கண்டுகொள்வதில்லை. ராம்நகர் முதல் வெளி முத்தி விளக்கு வரை மிகவும் ஆபத்தாகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் வரும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளோடு சாலையில் தடுமாறி விழுவது அன்றாட நிகழ்வாக உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் தமிமுன் அன்சாரி கூறியதாவது, தனியார் மருத்துவமனைகளிலும் இருசக்கர பழுதுபார்க்கும் கடைகளுக்கும் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய சாலையாக மாறிவருகிறது. மேலும் எங்கள் காரைக்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மாங்குடி அவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இந்த சாலை ஆனது முழுவதுமாக புதிதாக போடப்படும் என்று உறுதியளித்தார். அவர் கூறி மூன்று மாதத்திற்கு மேலாகிவிட்டது. அரசியல்வாதிகள் தேவகோட்டை நகரை மேம்படுத்துவதில் எந்த அக்கறையும் காட்டவில்லை என்றும், அரசு அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடிக்கிறார்கள் என்றும் அவர் சாடினார்.

ஆம்புலன்ஸ் அடிக்கடி இந்தச் சாலையில் சென்று வருவதால் மிகவும் மோசமான நிலையில் சாலை உள்ளதாகவும் விரைவாக தங்களது பணியினை செய்ய இயலவில்லை எனவும், இதனால் ஆபத்தான நிலையில் உள்ளவர்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் மன வேதனையுடன் தெரிவித்தனர். இனிமேல்வரும் மழை காலங்களில் தாங்கும் அளவிற்காவது செப்பனிட்டு தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.